சென்னை: காயிதே மில்லத் 124வது பிறந்தநாளையொட்டி நேற்று துணை முதல்வர், அமைச்சர்கள் அவரது நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். காயிதே மில்லத் பிறந்த தினமான ஜூன் 5ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழக அரசின் சார்பில், காயிதே மில்லத் 124வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை 10.30 மணியளவில், சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, ஜெயக்குமார், எம்சி.சம்பத், விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் அமைச்சர்கள், ஆற்காடு நவாப் அப்துல் அலி, எம்பி, எம்எல்ஏக்கள் மலர் போர்வை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.